விசேட கண்ணாடி இன்றி 3டி சினிமா பார்க்கலாம் – புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
முப்பரிமாணத்துடன் கூடிய ‘3டி’ படங்கள் திரைக்கு வந்து பிரமிப்பூட்டுகின்றன.
இப்படத்தை விசேஷ கண்ணாடி அணிந்து மட்டுமே பார்க்க முடியும். வெறுங்கண்ணால் பார்த்தால் அதற்குரிய சிறப்பு அம்சம் (ஸ்பெஷல் எபெக்ட்) கிடைக்காது.
தற்போது, அதையும் மிஞ்சும் வகையில் மிக பிரமாண்டமான சினிமா படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதை விசேஷ கண்ணாடி அணியாமல் சாதாரணமாக வெறுங்கண்ணால் பார்த்து ரசிக்க முடியும். இந்த சினிமா 270 டிகிரி கோணத்தில் பார்க்கலாம். ‘ஸ்கிரீன் எக்ஸ்’ தொழில்நுட்பத்தில் இந்த சினிமா படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரே காட்சியை ஒரே நேரத்தில் 3 காமிராக்களில் பலவித கோணங்களில் படம் பிடித்து அதை ஒருங்கிணைத்துள்ளனர்.
விசேஷ சிறப்பு அம்சங்களுடன் கூடிய இந்த சினிமா படத்தை தென்கொரிய டைரக்டர் கிம்ஜிவூன் உருவாக்கியுள்ளார். இதற்கு ‘தி எக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இது 30 நிமிடங்கள் ஓடக்கூடிய உளவாளி, ‘திரில்லர்’ கதை அம்சத்துடன் கூடிய படமாகும். கடந்த வாரம் தென்கொரியாவின் புசானில் நடந்த சர்வதேச படவிழாவில் ‘பிரீமியர் ஷோ’ ஆக இப்படம் திரையிட்டு காட்டப்பட்டது.
இந்த மாத இறுதியில் தென் கொரியாவில் உள்ள 31 சினிமா தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட உள்ளது. அதற்காக கூடுதல் திரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இச்சினிமா படம் உருவாக்கியது குறித்து டைரக்டர் கிம் ஜி வூன் கூறும் போது, ‘இந்த புதிய தொழில்நுட்பம் சினிமாவுக்கு மிகப்பெரிய பிரமாண்டத்தை கொடுத்துள்ளது’ என்றார்.